Friday, November 13, 2015

மழைநாளில் வீட்டு மருத்துவம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழகத்தில் மழைக் கொட்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சில தகவல்களை பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் மீண்டும் பிளாகர் பக்கம் வந்துள்ளேன்.

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேல் தொலைபேசித் துறையில் பணி. இரவு, பகல் என 24 மணிநேர பணி சுழற்சி. ஆனாலும் என் வீட்டில் நான் செயல்படுத்திய, இன்றும் செயல்படுத்தி வருகின்ற சின்ன சின்ன விஷயங்களை முயற்சித்துப் பாருங்களேன்.
  1. காலையில் எழுந்ததும் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயத்துடன் ஒரு டம்ளர் வெந்நீர். அதன் பிறகுதான் காபி.
  2. காலையில் சாப்பாடு. சாப்பிடுவதற்கு 1/2 மணி முன்னர் வெந்நீர்.
  3. தினமும் சாப்பாட்டில் ஆளுக்கொரு ஒரு நெல்லிக்காய் -  குக்கரில் மற்ற காய்கறிகள் போல் வேகவைத்து விடுவேன். 
  4. அதுபோல உப்பு, காரம்  போடாமல் வட்ட வட்டமாய் வெள்ளறிக்காய் நறுக்கியது. 
  5. தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள இரண்டு சிறிய வெங்காயம் பச்சையாய்.
  6. வாரம் ஒருநாள் பாகற்காய் சாம்பார்/பிட்லை.
  7. மதியம் லைட்டாக சத்துமாவு அல்லது ஓட்ஸ் கஞ்சி. வேலைக்குச் செல்பவர்களுக்கு ஏதேனும் டிபன்.
  8. இரவு ஏதேனும் டிபன். புளி சேர்க்காத சைட் டிஷ். சாப்பிடுவதற்கு 1/2 மணி முன்னர் வெந்நீர். 
  9. இரவு படுக்கும் முன் பூண்டு 4 அல்லது 5 வில்லைகள், வேகவைத்தது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மழையால் தொற்றிக்கொள்ளக் காத்திருக்கும் வியாதிகள் கிட்டே நெருங்க யோசிக்கும்.
  10. அதன் பின்னர் சூடாக ஒரு கப் பால் அல்லது வெந்நீர்.
  11. இருமல் வரும்போல அறிகுறி தெரிந்தாலே நெய்யில் மிளகை வெடிக்க வைத்து மென்று சாப்பிடுதல்.
  12. பண்டிகை மற்றும் திருமண விழாக்களில் வெளியில் சாப்பிட்டு வந்தால் வெந்நீரில் பெருஞ்சீரகத்தை போட்டு சாப்பிடுதல். (ஓட்டலில் சாப்பிட்ட நேர்ந்தாலும்)  இரண்டு மூன்று முறை இப்படி சாப்பிடுவதால் வயிறு உப்புசம், ஜீரணக் கோளாறு போன்றவை வராது.
  13. எங்கு வெளியில் சென்றாலும் கையில் சாதாரண சீரகம், பெருஞ்சீரகம், ஓமம் போன்றவற்றை எடுத்துச் செல்லுதல்.
  14. வயிறு குமட்டல், வாமிட்டிங் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சாதாரண சீரகத்தை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  15. தலைவலி வந்தால் முதலில் தண்ணீரில்  முகத்தை கழுவ வேண்டும். பிறகு ஆவி பிடிக்கலாம். உடனடியாக  பெருஞ்சீரக வெந்நீர் குடிக்கலாம். பின்னர் கண்களை மூடிக்கொண்டு 1/2 மணி படுக்கலாம். இவை எதற்குமே  சரியாகவில்லை என்றால் மாத்திரைக்குச் செல்லலாம்.
  16. வயிற்று வலி வந்தால் வெந்நீரில் நெய்யைவிட்டு சாப்பிடலாம்.
  17. வயிற்றுப் போக்கு வந்தால் வெந்தயத்தை தயிரில் போட்டு சாப்பிடலாம். ஜவ்வரிசியை வேக வைத்து சாப்பிடலாம். உடனடியாக வயிற்றுப்போக்குக் கட்டுப்படும். 
  18. வாரம் ஒரு நாள் காலையில் இஞ்சியை மிக்ஸியில் அரைத்து வெந்நீரில் கரைத்து கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் கலகலப்பாக இருக்கும்.
  19. பொதுவாக வயிறு மற்றும் தலைவலி சம்பந்தப்பட்ட தொந்திரவுகள் தெரிந்தாலே தண்ணீருக்கு பதில் வெந்நீர் சாப்பிடலாம். நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.
  20. மழை நாட்களில் வீட்டுக்குள் வரும்போது செருப்பை உடனடியாக நல்ல தண்ணீரில் கழுவி வைத்துவிட வேண்டும். நோய் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். 
  21. கூடுமானவரை புத்தகங்கள், பணம் போன்றவற்றை எச்சில் தொட்டு திருப்பாமல் இருக்கலாம்.  ஏற்கெனவே பலர் எச்சில் தொட்டு திருப்பி இருப்பார்கள். அதையே நாமும் நம் நாக்கில் தொட்டு திருப்பினால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. 
- கே. பத்மாவதி





No comments: